Friday, June 3, 2016

மூணாறு சுற்றுலா - August 14, 15. 2016

 Clik all photos
(to see all photos click on above photo)

மூணாறு காணக் கண் போதாது


மூணாறு தமிழகத்தின் அருகிலுள்ள கேரளத்தின் தெற்கத்திய மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு அழகிய நகரம். தேயிலை தயாரித்தலே இங்கு முக்கியமான தொழில். முத்தரப்புழை, நல்லதண்ணி, குண்டலை ஆகிய மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடமாததால் மூன்றாறு என்றிருந்து மூணாறாகியுள்ளது. சுற்றுலாத்தலத்தில் உலக மக்களைக் கவரும் தேயிலைத் தோட்டங்களும் இயற்கை எழில் கொஞ்சும் கண்கவர் முகில்களும், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளும் கண்கொள்ளாக் காட்சி.

உதகமண்டலம், கொடைக்கானலுக்குப் பிறகு தீபகற்ப இந்தியாவில் உள்ள மூன்றாவது புகழ்பெற்ற கோடைத் தலம் மூணாறு. இந்நகரின் பெரும்பான்மை மக்கள் தமிழர்களே. ஜான் முன்றே டேவிட் என்ற ஆங்கிலேயர் முதன் முதலில், இங்கே வந்தார். அவர் பெயரில் உள்ள முன்றே என்பதே மருவி பின் நாளில் மூனாறு என்று ஆனது என்ற கருத்தும் உள்ளது, போதிய ஆதாரம் இல்லை.

இப்பகுதி முழுவதும் முதுவான் இன, மலை வாழ் மக்களின் வசம் இருந்தது. இவர்களுக்குப் பின் பூஞ்சார் ராஜ வம்சத்தினரின் ஆட்சியில் இருந்தது. பின்னர், ஆங்கிலேயரின் வசத்தில் இருந்தது. ஆங்கிலேயர்கள் தேயிலை விவசாயத்தைத் தொடங்கினர். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழகத்தில் இருந்து ஆட்களை வரவழைத்தனர். சரக்குகளை கையாளுவதற்கு ரயில் வசதியை ஏற்படுத்தினர். இங்கு உற்பத்தியான தேயிலை உலக அளவில் பிரசித்து பெற்றது.

தமிழ்நாடு-கேரள எல்லையில் கடல் மட்டத்தில் இருந்து 1,600 மீட்டர் உயரத்தில் உள்ள இயற்கை எழில் வாய்ந்த இந்த அழகிய மலைப் பகுதியில் பயணம் செய்ய கல்கி வார இதழ் அலுவலகப் பணியாளர்கள் 12 பேர் குழு மூன்று மாதங்களுக்கு முன்பாகவே திட்டமிட்டு அந்தக் குதூகலக் கொண்டாடத்துக்காகக் காத்திருத்தோம். அந்த நாளும் வந்தது. ஆம் ஆகஸ்ட் 13 சனி இரவு 10 மணிக்கு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தோம். சரியாக காலை 5 மணிக்கு தேனியில் இறங்கி அங்கு ஆசுவாசப்படுத்திக்கொண்டு மூணாறு பஸ் பிடித்தோம். 10 மணிக்குப் புறப்பட்ட அரசுப் பேருந்து மலை ஏற்றத்தில் பல கொண்டை ஊசி வளைவு களைக் கடந்து போய் கொண்டிருந்தது. அந்த வேளையில் பெரும்பாலும் பயணிகள் உணவருந்தாமல் இருப்பது நல்லது. ஏனென்றால் அடிக்கடி வரும் கொண்டை ஊசி வளைவும் மிகவும் குறுகியது. உடனே உடனே பேருந்து திரும்பி திரும்பி மலையில் ஏறுவதால் குடல்கள் புரண்டு வயற்றைக் கலக்கிவிடும்.

நாங்கள் காலையில் உணவருந்திவிட்டு சென்றதால் சிலருக்கு கொஞ்சம் வயிற்றைக் கலக்கியிருக்கும். நல்ல வேளையாக மலையில் பாதி தூரம் சென்றதும் டிராப்பிக் ஜாம் ஏற்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் தாமதமாகிவிட்டது. இருந்தாலும் அதுவும் புது அனுபவமாக இருந்தது. இருவரைத் தவிர நாங்க அனைவரும் பேருந்திலிருந்து இறங்கி மிதமான குளிரில் நடந்தோம். வாகனங்கள் அனைத்தும் வழியில் நிறுத்தப்பட்டிருந்தன.

ஓங்கி வளர்ந்த மலைகள், குகைகள், செடிகள், மரங்கள், பூக்கள், மலைமண் வாசனை எல்லாம் சேர்ந்து எங்களை புது உலகத்துக்கு அழைத்துச்சென்றது. தினம் தினம் ஒரே வேலை, பரபரப்பான வாழ்க்கையில் இந்தப் பயணம் புது சுகம் தந்தது. அலுவலக நாற்காலி தரத்தை மறந்து, சீனியாரிட்டி சுப்பீரியாரிட்டி மறந்து உடன் பிறந்த தோழர்களைப்போல நாங்கள் கைகோர்த்து, அதோ அங்கு பார், இதோ இங்கு பார் என்று சிறு பிள்ளைகளாக கூக்குரலிட்டு சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தோம். அதற்குள் கொஞ்சம் டிராப்பிக் ஜாம் குறையவே பேருந்தில் ஏறிப் புறப்பட்டோம். மத்தியம் 3 மணி வாக்கில் மூணாறு அடைந்தோம்.

நான்கு பக்கமும் குவிந்த மலைக்கு நடுவில் சம தளத்தில் சிறிய ஊர். எல்லாரும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தார்கள். இங்கு தமிழர்களே அதிகம். இந்தியாவைவிட்டு வெள்ளையன் வெளியேறிய போது சுதந்திரத்துக்குப்பின் இந்திய மாநிலங்கள் மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. அப்போது ஆந்திரர்கள் சென்னையை கைப்பற்ற நினைத்தார்கள். தகுந்த ஆதாரங்களோடு ம.பொ.சி. மற்றும் திரு.வி.க. ஆகியோர் போராடினார்கள். சென்னையை விட்டுவிட்டு ஏர்ப்போர்ட்டை கைப்பற்ற ஆந்திரர்கள் போராடினார்கள். ஏனென்றால் ஆந்திராவில் பெரிய தொழில் நிறுவனம் எதுவும் இல்லையாம். அப்போது திருப்பதியா? சென்னை ஏர்போர்ட்டா? ஏதாவது ஒன்றைத்தாருங்கள் என்று வலியுறுத்தினார்கள். பல ஆண்டுகளுக்கு முன்னே ஒரு குழு திருப்பதியை கைப்பற்றி முருகனைத் திருமாலாக்கி பிறகு அவருக்கும் வேஷம் போட்டு பாலாஜியாக்கிவிட்டார்கள். திருப்பதியைக் கட்டியது தமிழ் மன்னன்தான். சுவர்களில் தமிழ் பெயர்கள் இருப்பதை இன்றும் பார்க்கலாம். அப்போது தமிழகத்தில் போராட நாதியில்லை. திராவிடக் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை. ஓரிருவராகப் போராடியதால் திருப்பதி பறிபோனது. இன்னொரு பக்கம் கேரளம், தமிழக எல்லையான தமிழர்கள் அதிகம் பூர்வீகமாக வாழ்ந்த தேவிகுளம், பீர்மேடு பகுதிகளை எங்களுக்குச் சொந்தம் எனப் போராடி பிடுங்கிக்கொண்டது. அதையும் தட்டிக்கேட்க தமிழகத்தில் நாதியில்லை. அந்தப் பகுதிக்குத்தாம் நாங்கள் போயிருந்தோம்.

அங்கு கால்வைத்ததும் இந்த நினைவுகள் வந்தன. மார்க்கெட் தெருவில் தங்கும் விடுதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாங்கள் புறப்படுவதற்கு முன்னாலேயே அந்த லாட்சில் தங்கும் கட்டணம் பேசப்பட்டது. நாங்கள் தெரிந்தவர் மூலமாக அங்கு போய் பார்த்துக்கொள்ளலாம் என்று அஜாக்கிரதையாக இருந்தோம். ஆனால் நடந்தது வேறு. போனில் பேசியபோது 3000 ரூபாய் வாடகை பேசியவர்கள் நேரில் சென்றதும் 5000 ரூபாயாக உயர்த்திவிட்டார்கள். பயணக் களைப்பு, வயிற்றுப் பசி, பிசுபிசு மழை எல்லாம் சேர்ந்து எங்களைச் சோர்வடையச் செய்துவிட்டது. அனைவரும் ரூமில் தங்கி ஒரு குட்டிப் பயணம் செல்லத் திட்டமிட்டோம். ஆனால் 5 மணிக்குமேல் வாகன ஓட்டிகள் வரத் தயங்கினார்கள். அதனால் அனைவரும் திருப்தியாக உணவருந்திவிட்டு இரவு அனைவரும் கூடி இரவு முழுக்கப் பேசி சிரித்து அரட்டை அடித்து உள்ளத்தில் உள்ளதை யெல்லாம் கொட்டித் தீர்த்து முடிப்பதற்குள் நடுநிசி ஆகிவிட்டது. மறுநாள் மாலையே குழுவில் ஒரு பகுதியினர் வீடு திரும்பவேண்டி ரயில் புக் செய்ததால் ஒரு குட்டிப் பயணம் செய்து சில இடங்களைப் பார்வையிட்டோம்.

எங்களின் பயணத்தில் முதலில் சென்றது view point. பாதையில் செல்ல செல்ல, காடுகள் மறைந்து தேயிலை தோட்டங்கள் வரவேற்கத் தொடங்கியது. காணக் கண் கோடிகள் போதாது.

சுற்றுலா தளங்களில் பொருட்களின் விலை அதிகம் என்பதால், ஒன்றும் வாங்கவில்லை. மூணாறிலிருந்து 11கி.மீ. தொலைவில் உள்ள மாடுப்பெட்டி அணையை முதலில் காணச் சென்றோம். மாடுப்பெட்டி அணையின் மற்றுமொரு சிறப்பு, நீர் மின் நிலையம். இது நீர் மின்சாரம் உற்பத்தி செய்ய கட்டப்பட்ட நீர்த்தேக்கம். இந்நீர்த்தேக்கத்தில் ஆண்டு முழுவதும்நீர் இருப்பதால் யானை முதலிய காட்டுயிர்கள் நிறைந்து காணப்படுகின்றன. மாடுப்பெட்டி அணையின் முடிவில் “Echo Point” அமைந்துள்ளது. அங்கு நின்று அவரவர்களுக்கு பிடித்த நபர்களின் பெயரால், ஏற்படும் எதிரொலி கேட்டு மகிழ்ந்தோம். மாடுப்பெட்டி அணை சுமார் ஆறு கி.மீ. அளவிற்கு நீண்டுள்ளது. யானை மற்றும் படகு சவாரி செய்யும் வசதி உள்ளது.

அடுத்து நாங்கள் சென்ற இடம் குண்டாடா அணை. இதுவும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. எனக்கு மாடுப்பெட்டி அணையை விடவும் இந்த அணைதான் பிடித்தது காரணம், குறைவான கூட்டம் மற்றும் கடைகள்.

படகு சவாரிக்கும் சிறந்த இடம். பெடல் போட்டில் ஒருமணி நேர பயணம் செய்யும் போதுதான், இயற்கையை எவ்வளவு நாம் கெடுத்து வைத்துள்ளோம் என்பது புரியும்.

குண்டாடா அணையிலிருந்து டாப் ஸ்டேஷன் செல்லும் பாதைதான் மூணாறில் எனக்குப் பிடித்த இடம். தேயிலை தோட்டங்கள், அவற்றைத் தழுவிச் செல்லும் மேகக் கூட்டங்கள் எனக் கண்கொள்ளாக் காட்சி கண்முன் விரிகிறது. நண்பகல் நேரம். ஆனால் அதற்குண்டான வெயில், வெப்பம், எதுவும் இல்லாமல் இதமான சூழலே அழகு நடம் புரிந்தது. அதனால் அங்கு ஒரு போட்டோ சூட் நடத்தாமல் எப்படி மேலே போகமுடியும்? 1600 மீட்டரிலிருந்து 1800 மீட்டர் கடல் மட்டத்திற்கு மேல் அமைந்துள்ள இந்த நகரில் மலைமேல் உள்ள தெய்வங்களின் சாட்சியாக முருகன் கோவில் ஒன்றும் உண்டு. இங்கு கார்த்திகைப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

எல்லாவற்றையும் கண்டுகளித்து எர்ணாகுளம் ரயில் நிலை யத்துக்குப் புறப்பட்டோம். போகும்போது லோக்கல் கேரள பேருந்தில் ஏறிய தால் கிட்டத்தட்ட ஐந்து மணிநேரம் சிறிய சீட்டில் அமர்ந்து அனைவரும் கொஞ்சம் கஷ்டப்பட்டோம். அந்தப் பேருந்து கேரளத்தின் ஒரு பகுதியைச் சுற்றிக் காட்டியது. அங்கு ஒரு விசேஷம் எந்த இடத்திலும் பேருந்து உட்பட மலையாளத்தைத் தவிர வேறு மொழிகளில் ஏன் ஆங்கிலத்தில்கூட பெயர் பலகைகள் இல்லை. அவர்களிடம் கேட்டாலும் மலையாளத்திலேயே பரைக்கிறார்கள். வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டை நினைத்துக்கொண்டோம்.

ஒரு வழியாக ஆறு மணிக்கு எர்ணாகுளம் வந்து அங்கு ஒரு தங்கும் விடுதியில் அனைவரும் மூன்று அறைகளில் தங்கி கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பிறகு கிளம்பி உண வருந்தச் சென்றோம். கேரளாவில் பிரியாணி வெள்ளையாகவே உள்ளது. சென்னையைப் போல மசாலா கலந்து செந்நிறத்தில் இருப்பதில்லை. சில கடைகளில் பிரியாணி உள்ளே மசாலா வைக்கிறார்கள். எல்லாம் காரசாரம் இல்லாதவை. கேரளாவில் ஒரு ஸ்பெஷல் அயிட்டம் பீப் பிரைதான். அடுத்து கட்டஞ்சாயா, கொண்டைக்கடலை புட்டு. கேரள சேச்சிகள் சேட்டன்கள்.

இப்போது மூணாறு வரலாற்றைப் பார்ப்போம்.



இன்று இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலா பகுதி என உலக அளவில் பிரசித்து பெற்றுள்ள மூணாறு, 90 ஆண்டுகளுக்கு முன்பு ஜூலையில் பெய்த தொடர் மழையால் முற்றிலுமாக அழிந்து, பின் புது ஜென்மம் எடுத்துள்ளது. இது பெரும்பாலானோருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பி ல்லை.

கடந்த 1924 ஜூலை 6ம் தேதி முதல், ஒன்பது நாட்கள் பகலும், இரவும் இடை விடாமல் பெய்த பேய் மழையினால், நகர் மட்டும் இன்றி, சரக்குகளை கையாளுவதற்கு அமைக்கப்பட்ட சரித்திர புகழ் வாய்ந்த ரயில் பாதைகள், 'ரோப் வே' போன்றவைகள் அழிந்தன.

மூணாறு பகுதிக்கு பூஞ்சார் ராஜா மற்றும் ஆங்கிலேயர் போன்றோர் வரும் முன், இப்பகுதி முழுவதும் முதுவான் இன, மலை வாழ் மக்களின் வசம் இருந்தது. இவர்கள் பாண்டியர், -சோழர் மன்னர்களிடையே நடைபெற்ற போரின்போது, மதுரையில் இருந்து தப்பி வந்த வம்சாவளியை சேர்ந்தவர்கள். மலை வாழ் மக்கள் வசம் இருந்த மூணாறு, அஞ்சுநாடு பகுதிகளை 1252ல் பூஞ்சார் ராஜ குடும்பத்தினர் தங்கள் வசமாக்கினர். 100 ஆண்டுகள் பூஞ்சார் ராஜ குடும்பத்தினர் ஆதிக்கம் செலுத்தினார். இப்பகுதிக்கு வழிகாட்டியாக அமைந்த மலைவாழ் மக்கள் இனத்தைச் சேர்ந்த கண்ணன், தேவன் ஆகியோரின் நினைவாக, 'கண்ணன்- தேவன் ஹில்ஸ்' என இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது.

மைசூர் திப்பு சூல்தான் மன்னர், திருவிதாங்கூர் மீது படையெடுத்த காலத்தில், ஆங்கிலேயர்கள் முதன் முறையாக மூணாறுக்கு வந்தனர். மதுரையில் இருந்து ஆங்கில படைகளுக்கு தலைமை வகித்து வந்த கர்னல் ஆர்தர் வெல்லஸ்லி 1790ல், கம்பம்மெட்டு வழியாக மூணாறுக்கு வந்தார். ஆங்கிலேயர்களின் வருகை, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு சவாலாக விளங்கிய திப்பு சுல்தான் மன்னனை எதிர்ப்பதை நோக்கமாக கொண்டிருந்தனர். யுத்தத்திற்கு பிறகு திப்பு சுல்தான் மைசூருக்கு சென்று விட்டபோதிலும், ஆங்கிலேயர் மூணாறை விட்டு செல்லவில்லை.

பூஞ்சார் ராஜாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலத்தில், ஆங்கிலேயர்கள் தேயிலை விவசாயத்தை தொடங்கினர். முதன் முறையாக 1880ல், ஆங்கிலேயர் ஏ.எச். ஷார்ப் தேயிலை செடிகளை நட்டார். அதன் பின்பு இங்கு நிலவிய இயற்கை எழிலில் மயங்கிய ஆங்கிலேயர்கள் பல தலைமுறைகளாக தேயிலைத் தோட்டங்களை நிர்வகித்தனர். தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழகத்தில் இருந்து ஆட்களை வரவழைத்தனர். திருச்சியில் சிறப்பு மையம் அமைத்து, ஆட்கள் தேர்வு நடந்தது.
இவர்களின் உழைப்பால், மூணாறு நகர் உருவாகியது.மூணாறை, சுற்றிலும் 16 தேயிலை தொழிற்சாலைகளை ஆங்கிலேயர்கள் உருவாக்கினர். தேயிலை உள்ளிட்ட சரக்குகளை கையாளுவதற்கு, பிரிட்டனில் இருந்து 500 காளை மாடுகளையும், அவற்றை பராமரிப்பதற்கு ஒரு டாக்டர் இடம்பெற்ற மூன்று பேர் குழுவை அழைத்து வந்தனர். தேயிலைத் தோட்டங்கள் அதிகரித்து, உற்பத்தி உயர்ந்ததால், காளை மாடுகள் மற்றும் தொழிலாளர்கள் மூலம் சரக்கு களை கையாள இயலாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து சரக்குகளை கையாளுவதற்கு ரயில் வசதியை ஏற்படுத்தினர். கடந்த 1902ல் ரயில்கள் ஓடத் தொடங்கியது.

மூணாறில் இருந்து மாட்டுப்பட்டி, குண்டளை வழியாக தமிழகத்தில் தேனி மாவட்ட எல்லையான 'டாப் ஸ்டேஷன்' வரை ரயில் பாதை அமைக்கப்பட்டது. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை டாப் ஸ்டேஷன் வரை ரயிலிலும், அங்கிருந்து 'ரோப் வே' மூலம் போடிக்கும் கொண்டு செல்லப்படும். அங்கிருந்து துாத்துக்குடி துறை முகம் வழியாக பிரிட்டன் கொண்டு செல்லப்பட்டது. இதன் மூலம் மூணாறில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உலக அளவில் பிரசித்து பெற்றது. ஆங்கி லேயர்கள் அமைத்த ரயில் மற்றும் 'ரோப் வே' போன்றவை உலக அளவில் சிறந்ததாக திகழ்ந்தது. ரயில் வசதி தொடங்கி 5ம் ஆண்டில், டெலிபோன் வசதி ஏற்படுத்தப்பட்டது.

90 ஆண்டுகளுக்கு முன் 1924ம் ஆண்டு ஜூலை மாதம், 6ம் தேதி முதல் 24ம் தேதி வரை, கேரளா முழுவதும் கன மழை பெய்தது. அப்போது மூணாறில் 9 நாட்கள் பகலும், இரவும் இடைவிடாமல் பெய்த பேய் மழையினால், மலைகளில் இருந்து பெருக்கெடுத்த நீர், பிரளயத்தை ஏற்படுத்தியது. கரை புரண்டு ஓடிய தண்ணீரால், மூணாறு நகர் உள்பட 10 கி.மீ., சுற்றளவு நீருக்குள் மூழ்கியது. மலை மீது அமைந்துள்ள நகர் என்ற கர்வம் அழிந்து, மூணாறு முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி உருத் தெரியாமல் அழிந்தது. நகர் மட்டும் இன்றி, சரித்திர புகழ் வாய்ந்த ரயில்வே ஸ்டேஷன், ரயில் பாதை மற்றும் பாலங்கள், 'ரோப் வே' மற்றும் டெலிபோன் மற்றும் மின் கம்பங்கள், ரோடுகள், பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவைகள் காணாமல் போயின.

தண்ணீர் வற்றுவதற்கு இரண்டு வாரங்கள் ஆனது. நீர் ஓட்டத்தினால், ஆறுகளின் போக்கு மட்டும் இன்றி, ரோடு மார்க்கமான வழித் தடங்களும் மாறின. அதன் பின் கட்டடங்கள், ரோடுகள் உள்ளிட்ட வசதிகளுடன் புதிய மூணாறு உருவாக்கப்பட்ட போதிலும், ரயில் சேவை, 'ரோப் வே' போன்றவைகள் சீரமைக்க இயலாமல் அழிந்து விட்டன. ரயில்கள் இயக்கப்பட்டதற்கு அடையாளங்கள் தற்போது பெரும்பாலான இடங்களில் உள்ளன. இவை ரயில் பாதையாக அல்ல, ரயில் தண்டவாளங்களைக் கொண்டு, உருவாக்கப்பட்ட மின் கம்பங்களாக காட்சியளித்து வருகின்றன. மூணாறுக்கு அழிவை ஏற்படுத்தியபோது, ஜூலையில் மட்டும் 485 செ.மீ., மழை பெய்ததாக ஆங்கிலேயர்களால் எழுதப்பட்டுள்ள வரலாற்று புத்தகங்கள் சாட்சியளிக்கின்றன.

கன மழைக்கு நுாற்றுக்கணக்கானோர் இறந்தனர். பலரது உடல்கள் கட்டடங்களுக்குள் சிக்கிய நிலையில் காணப்பட்டன. வீடுகளும், கால்நடைகளும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளப் பெருக்கின்போது, மூணாறில் கட்டடத்திற்குள் சிக்கியவர்கள் பலியான நிலையில், அதிர்ஷ்டவசமாக 19 வயது பெண்ணும், 6 வயது சகோதரரும் உயிர் தப்பினர். தங்களைச் சார்ந்தவர்கள் அனைவரும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டதால், எஞ்சிய அவர்களும், தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பின் மீண்டும், மூணாறு மீண்டது தனி வரலாறு.

ஒருவழியாக 12 பேர் குழுவில் ஆறு பேர் மட்டும் அலுவலகம் திரும்ப வேண்டிய சூழ்நிலை. எர்ணாகுளத்திலிருந்து சென்னைக்குப் புறப்பட்ட லிஸ்டில் நான் இருந்தேன். மீதி ஆறு பேர் எர்ணாகுளம் ஆர்பாருக்குப் போர் அங்குள்ள குட்டித்தீவுகளைச் சுற்றிப் பார்க்கப் புறப்பட்டார்கள். நாங்கள் ஆறு பேர் இயற்கை சுவாசத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து பெட்ரோல் புகை சுவாசத்தை சுமந்துகொண்டு அலுவலகம் வந்தோம். மீண்டும் பரபரப்புப் பற்றிக்கொண்டது.

இன்னொரு சுற்றுலா எப்போது? மனம் ஏங்கியது. அடுத்த அரசு விடுமுறை சேர்ந்தாற்போல் இரண்டு நாட்கள் அமைந்தால்தான். காத்திருப்போம்.

1 comment: